Thursday 17 December 2015

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள ....!! ( பகுதி - 9 )

அனைவருக்கும் அன்பான வணக்கம் 🙏

யோகிகள், ஞானிகள் அல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியில், அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவ வழிபாடு இன்றியமையாததாக கருதப்படுகிறது.

இறைவன் உருவம் இல்லாதவர் என்றாலும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவ வடிவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

முன்பு வாழ்ந்த நம்முடைய முன்னோர்கள் நம்மை மீறிய சக்தியை உணர்ந்தார்கள், அது இந்த ப்ரபஞ்சத்தை இயக்கி கொண்டிருப்பதையும் அறிந்தார்கள். அப்படி இந்த ப்ரபஞ்சத்தை இயக்கி கொண்டிருக்கும் அந்த சக்தியைத்தான் இறைவன் என்றார்கள்.

இந்த இறைவனுக்கும் தமக்கும் இடையேயுள்ள உறவுபாலமாக இருப்பது நம்முடனே வாழ்ந்துக் கொண்டிருக்கும் இயற்கை தான் என்று அறிந்துக் வழிபாட்டில் ஈடுபட்டார்கள்.

அப்படி தானறிந்த இயற்கையின் வெளிபாடுகளின் மூலம் இறைவனின் சக்தியை உணர்ந்தார்கள். அப்படியே தான் உணர்ந்த சக்திக்கு தன்னைப் போன்றும் , தான் பார்த்துக்கொண்டு இருக்கும் அம்சங்களையும் சேர்த்தே உருவமாக மாற்றி வழிபாடு செய்தார்கள் .

இப்படி உருவான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள உருவ வழிபாடு முக்கியமானதாகிறது.

அப்படியென்றால், இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம் என்ன? இறைவன் ஒருவரே தான்.

அவர், வடிவம் உள்ளிட்டவைகளுக்கு அப்பாற்பட்டவராயினும், சக்தியினால் பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம்.

இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக குறிப்பிடுகிறார்.
`தங்கம் ஒன்று தான் என்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது அல்லவா?' என்று கேட்கிறார் வாரியார்.

கோவிலின் உள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுழைவாயில்களில் துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி நிற்கின்றார்கள்.

மேலும் அன்புடன் தொடருவோம் ....

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம் , உங்கள் கர்மவினைகளால் .... என்னையும் சேர்த்தே ....✒

🌺அன்போடு தொடருவோம் ....  அறிந்துகொள்ள ....🌺(ப-9)

மேலூர் எஸ். எம் ராஜா
9442822011

No comments:

Post a Comment